முகநூலில் பெண்போல் நடித்து கைவரிசை - வாலிபர்கள் கைது


முகநூலில் பெண்போல் நடித்து கைவரிசை - வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 28 Sep 2018 11:41 PM GMT (Updated: 28 Sep 2018 11:41 PM GMT)

முகநூலில் பெண் போல நடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த குமரி வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

முகநூலில் பெண் போல நடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 45), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தனசேகரனின் முகநூல் (பேஸ்புக்) கணக்குக்கு பிரபாவதி என்ற பெயரில் நட்புக்கான அழைப்பு வந்தது. பிரபாவதி முகநூல் கணக்கில் ஒரு அழகான பெண்ணின் புகைப்படம் இருந்தது.

எனவே அந்த நட்புக்கான அழைப்பை தனசேகரன் ஏற்றுக் கொண்டார். இருவரும் முகநூலில் பேசிக்கொண்டனர். அப்போது அந்த பெண் தான் ஊமை என்றும், நாகர்கோவிலில் வசிப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் தான்மட்டும் தனியாக வீட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதை அப்படியே நம்பிய தனசேகரன் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசினார்.

இதையடுத்து 2 பேரும் செல்போன் நம்பரை பரிமாறிக் கொண்டனர். அதன்பிறகு 2 பேரும் வாட்ஸ்-அப் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டனர். குறுஞ்செய்திகள் அனுப்பியே இருவரும் நெருக்கமாகி விட்டனர். இதற்கிடையே அந்த பெண் ஏதோ சிகிச்சைக்காக பணம் கேட்டதாக தெரிகிறது. தனசேகரனும் பணம் கொடுக்க சம்மதித்து மதுரை வருமாறு அந்த பெண்ணை அழைத்தார். ஆனால் அவர் மதுரை செல்ல மறுத்து தனசேகரனை நாகர்கோவிலுக்கு அழைத்தார்.

தன் முகநூல் தோழியை பார்க்கும் ஆசையில் தனகேரனும் சம்பவத்தன்று இரவு நாகர்கோவில் வந்தார். பின்னர் வடசேரி பஸ் நிலையத்தில் தனசேகரன் காத்திருந்தார். இதைத் தொடர்ந்து ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து பிரபாவதியின் தம்பி என்று கூறி தனசேகரனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.

அவரை தெங்கம்புதூர் அருகே உள்ள கோழிப்பண்ணைக்கு அந்த வாலிபர் அழைத்துச் சென்றார். அங்கு மேலும் ஒரு வாலிபர் இருந்தார். 2 வாலிபர்களும் சேர்ந்து தனசேகரனை தாக்கி செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்தனர். அப்போது தான் ஏமாற்றப்பட்டது தனசேகரனுக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஏ.டி.எம். கார்டு மூலம் இரவு 12 மணிக்கு முன் ரூ.40 ஆயிரமும், 12 மணிக்கு பிறகு ரூ.40 ஆயிரமும் என மொத்தம் ரூ.80 ஆயிரம் எடுத்தனர்.

அதன்பிறகு தனசேகரனை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். முகநூலில் பெண் போல நடித்து தனசேகரனை வாலிபர்கள் ஏமாற்றிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி வடசேரி போலீஸ் நிலையத்தில் தனசேகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரையும் உடனே பிடிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. வடசேரி பஸ் நிலையம், கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் வழி ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது 2 வாலிபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குமரி மாவட்டகாரங்காடு கல்லுவிளையை சேர்ந்த பொன்னுலிங்கம் (30), செருப்பங்கோடை சேர்ந்த சிவலிங்கம் (34) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் 2 பேரும் சேர்ந்து தான் தனசேகரனை ஏமாற்றி பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது பொன்னுலிங்கம் தெங்கம்புதூரில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அந்த கோழிப்பண்ணையில் வைத்து தான் தனசேகரனிடம் செல்போனையும், ஏ.டி.எம். கார்டையும் அவர்கள் பறித்துள்ளனர். சிவலிங்கம் கூலி தொழில் செய்து வருகிறார்.

முகநூலில் பெண்கள் பெயரில் கணக்குகளை தொடங்கி ஆண்களை ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தனசேகரனிடம் ஏமாற்றியது போல ஈத்தாமொழியை சேர்ந்த ராமு என்பவரையும் ஏமாற்றி ஆட்டோவில் அழைத்துச் சென்று ஒரு பவுன் நகையை பறித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து பொன்னுலிங்கம் மற்றும் சிவலிங்கத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



Next Story