சங்ககிரி அருகே லாரி மோதி விபத்து: சைக்கிளில் சென்ற மாணவன் பலி


சங்ககிரி அருகே லாரி மோதி விபத்து: சைக்கிளில் சென்ற மாணவன் பலி
x
தினத்தந்தி 29 Sep 2018 10:45 PM GMT (Updated: 29 Sep 2018 8:47 PM GMT)

சங்ககிரி அருகே சைக்கிளில் சென்ற மாணவன் லாரி மோதி பலியானான்.

சங்ககிரி,

சைக்கிளில் சென்ற மாணவன் லாரி மோதி பலியான விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

சங்ககிரி அருகே மோரூர்கிழக்கு ஊராட்சி திருவாண்டிபட்டி நரியம்பாளிகாடு பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 37), தறி தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகன் ஜெகதீப் (11). இவன் கோழிகால் நத்தத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது மாணவன் காலாண்டு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தான்.

இந்த நிலையில் நேற்று காலையில், திருவாண்டிபட்டியில் உள்ள மளிகைகடைக்கு சென்று பொட்டுகடலை வாங்கி வருமாறு சித்ரா, வீட்டில் இருந்த தனது மகன் ஜெகதீப்பிடம் கூறியுள்ளார். உடனே ஜெகதீப் வீட்டில் இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு திருவாண்டிபட்டியை நோக்கி சென்றான்.

கோழிகால்நத்தம் பகுதியில் இருந்து பால்மடை செல்லும் சாலையில் மாணவன் சென்று கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் இருந்து தென்னை மட்டைகளை ஏற்றிக்கொண்டு வெளியே வந்த லாரி மாணவன் சென்ற சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மாணவன் ஜெகதீப் இறந்து விட்டான். விபத்தில் பலியான ஜெகதீப், பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக் டர்(பொறுப்பு) வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story