மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்


மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 1 Oct 2018 11:15 PM GMT (Updated: 1 Oct 2018 10:10 PM GMT)

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 768 மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.58 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 170 வீதம் ரூ.35 ஆயிரத்து 850 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்களும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 380 வீதம் ரூ.10 ஆயிரத்து 760 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.6 ஆயிரத்து 540 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி என ஆக மொத்தம் 14 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 1, 150 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் ப.ஜெயசுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story