சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கதர் ஆடை-நினைவு பரிசு பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார்


சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கதர் ஆடை-நினைவு பரிசு பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 2 Oct 2018 10:30 PM GMT (Updated: 2 Oct 2018 7:02 PM GMT)

பெரம்பலூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் காந்தி பிறந்த தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் காந்தி பிறந்த தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மருதராஜா எம்.பி., ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சாந்தா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்திற்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை செலுத்தி தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கதர் ஆடைகள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இதையடுத்து அவர் பேசுகையில், கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கதர் ஆடைகள் வி்ற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு சிறப்பு சலுகை கட்டணத்தில் துணிகளை வாங்கி கதர் பொருட்களை உற்பத்தி செய்யும் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைத்திட உதவிடவேண்டும் என்று கூறினார். பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பழைய பஸ் நிலையத்தில் தூய்மை பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உதவி இயக்குனர் (கதர் கிராமத்தொழில்கள்) பாலகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story