மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி காப்பாற்ற முயன்ற மகனும் உயிரிழந்த பரிதாபம்


மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி காப்பாற்ற முயன்ற மகனும் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 3 Oct 2018 11:00 PM GMT (Updated: 3 Oct 2018 7:15 PM GMT)

ஒரத்தநாடு அருகே வீட்டின் பின்புறம் அறுந்து கிடந்த வயரை மிதித்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற அவருடைய மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவராப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி சுசிலா (வயது 60). இவரது வீட்டின் பின்புறம் மின்சார வயர் அறுந்து கிடந்தது. நேற்று காலை தனது வீட்டின் பின்புறம் சென்ற சுசிலா எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் வயரை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி அலறிய சுசிலா மயங்கி விழுந்தார்.

அவரது சத்தம் கேட்டு மகன் வீரமணி(30) ஓடிவந்து தனது தாய் சுசிலாவை தொட்டு தூக்க முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சுசிலா மற்றும் அவரது மகன் வீரமணி ஆகிய இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுசிலாவும் அவரது மகன் வீரமணியும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி தாய்- மகன் பலியான சம்பவம் காவராப்பட்டு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சுசிலாவின் கணவர் ராமகிருஷ்ணனும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாரடைப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story