ரூ.3 கோடி மோசடி வழக்கு: ஈரோட்டில் தலைமறைவாக இருந்த பெண் கைது


ரூ.3 கோடி மோசடி வழக்கு: ஈரோட்டில் தலைமறைவாக இருந்த பெண் கைது
x
தினத்தந்தி 3 Oct 2018 10:30 PM GMT (Updated: 3 Oct 2018 9:47 PM GMT)

ரூ.3 கோடி மோசடி வழக்கில் ஈரோட்டில் தலைமறைவாக இருந்த பெண், சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ஈரோடு,

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 2012-ம் ஆண்டு சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கினார். பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடத்தினார். அப்போது அவருக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக பணம் வருவதாகவும் அறக்கட்டளையில் உறுப்பினராகி ரூ.1 லட்சம் வழங்கினால், அவர்களுக்கு ரூ.1 கோடி திரும்ப கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறினார். இதை நம்பிய பலர் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு ரவிச்சந்திரனிடம் பணத்தை கொடுத்தனர்.

இவர் மாவட்ட வாரியாக பணம் வசூல் செய்ய ஆட்களை நியமனம் செய்து இருந்தார். அதன்படி ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த கருணாமூர்த்தி, ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த சுதா (வயது 42) ஆகியோரை நியமித்து இருந்தார். இவர்கள் பல்வேறு நபர்களையும் சந்தித்து, ரவிச்சந்திரன் கூறியபடி ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி பணம் கிடைக்கும் என்று மூளைச்சலவை செய்து வந்தனர்.

இவர்கள் ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை சந்தித்தனர். அவர் அறக்கட்டளையில் பணம் முதலீடு செய்ய விரும்புவதை தெரிந்து கொண்ட ரவிச்சந்திரனும் பலமுறை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து மோகன்ராஜ் அவ்வப்போது லட்சம், லட்சமாக பணத்தை கருணாமூர்த்தி, சுதா மூலமாக ரவிச்சந்திரனிடம் வழங்கி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு வரை அவர் மொத்தம் ரூ.3 கோடியே 7 லட்சம் வழங்கினார்.

ஆனால் அவருக்கு ரவிச்சந்திரன் எந்த தொகையையும் திரும்ப வழங்கவில்லை. எனவே அவர் பணத்தை திரும்ப கேட்டார். அப்போது ரவிச்சந்திரன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மோகன்ராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த மோகன்ராஜ் கடந்த 2014-ம் ஆண்டு, ரவிச்சந்திரன், கருணாமூர்த்தி, சுதா ஆகியோர் மீது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். புகாரின் பேரில் அப்போதே ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கருணாமூர்த்தியும், சுதாவும் தலைமறைவாக இருந்தனர். இந்தநிலையில் வழக்கில் வேறு முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்ற மோகன்ராஜ் கோர்ட்டு மூலம் உத்தரவு பெற்றார். அதன்படி கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு இந்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசின் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் வழக்கை விசாரித்து கருணாமூர்த்தியை கைது செய்தனர். அப்போது சுதா தலைமறைவானார். எனவே அவரைப்பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தனர். ஆனால் சுதா போலீசாரின் கைகளில் சிக்காமல் தப்பித்து வந்தார்.

கோவை சி.பி.சி.ஐ.டி. ஒருங்கிணைந்த குற்ற வழக்குகள் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி தலைமையில் ஈரோடு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் போலீசார் மீண்டும் இந்த விசாரணையை தொடங்கினார்கள். இந்தநிலையில் சுதா ஈரோட்டில் பதுங்கி இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி, இன்ஸ்பெக்டர் ராதா ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்தனர். சுதா ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அதிரடியாக நுழைந்து சுதாவை கைது செய்தனர்.

உடனடியாக அவரை ஈரோடு 3-ம் எண் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு நீதிபதி உமாமகேஸ்வரி (2-ம் எண் விரைவு கோர்ட்டு, பொறுப்பு) முன்னிலையில் சுதாவை போலீசார் ஆஜர் படுத்தினார்கள். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story