கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் கொட்டும் மழையில் நடந்தது


கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் கொட்டும் மழையில் நடந்தது
x
தினத்தந்தி 4 Oct 2018 11:00 PM GMT (Updated: 4 Oct 2018 9:03 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் திருச்சியில் கொட்டும் மழையில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அப்போது மதுரை ஐகோர்ட்டு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள். இந்தநிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருச்சி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தற்செயல் விடுப்பு எடுத்து, நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். அங்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கென்னடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். கொட்டும் மழையிலும் ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் குடைபிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இது குறித்து மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், “எங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சேலத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு வருகிற 13-ந் தேதி நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லையென்றால் அடுத்த மாதம் (நவம்பர்) 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறினார். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் திருச்சியில் நேற்று அரசு அலுவலகங்கள் செயல்பட்டபோதும், பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி கிடந்தன.

இதேபோல் லால்குடியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சிறுதையூர் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொது தலைவர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் திருமாவளவன், மாவட்ட தலைவர் ராபின்சன் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் ஜெயராஜ், வட்டார செயலாளர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களை சேர்ந்த அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஆசிரியர் மன்றம், பட்டதாரி ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர், சத்துணவு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். முடிவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பு வட்டார தலைவர் வளவன்ராஜ் நன்றி கூறினார்.

துறையூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வட்டார தலைவர் தியாகராஜன், ஒருங்கிணைப்பாளர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

முசிறி கைகாட்டியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மணப்பாறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ வட்ட ஒருங்கிணைப்பாளர் பாக்கியசெல்வம் தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story