உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை


உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 4 Oct 2018 10:30 PM GMT (Updated: 4 Oct 2018 9:07 PM GMT)

உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி,

வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று இரவு 10.05 மணிக்கு குருபகவான்(தட்சிணாமூர்த்தி) விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் இருந்து விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் விருச்சிக ராசியில் பிரவேசித்தார். குருப்பெயர்ச்சியையொட்டி பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு ஹோமத்தில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் தங்களது பெயர், ராசி, நட்சத்திரங்களை சொல்லி பரிகார பூஜையில் திரளாக பங்கேற்று குருபகவானை வழிபட்டனர்.

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் பரிகார ராசிக்காரர்களுக்காக லட்சார்ச்சனை நடந்தது. நேற்று இரவு 8 மணி முதல் விக்னேஷ்வர பூஜையுடன் சிறப்பு ஹோமம் நடந்தது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் பயபக்தியுடன் குருபகவானை வேண்டி வணங்கினர். இரவு 10 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயசுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பரிகார பூஜை நடந்தது. கணபதி ஹோமம், குருபரிகார ஹோமம், ஆஞ்சநேயர் காயத்ரி ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இந்த பரிகார ஹோமம் மற்றும் பூஜையில் திரளானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி தெப்பக்குளம் நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதசுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி மாலை 6.30 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜை, புண்யாகவாசனமும், இரவு 7 மணிக்கு வேதிகார்ச்சனை, ஞானகுரு, தேவகுரு, மூலமந்திரம், மாலா மந்திரம் மற்றும் குரு காயத்ரி ஹோமங்களும் நடந்தன. இரவு 9.30 மணிக்கு பூர்ணாஹுதியும், தொடர்ந்து மகா அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பரிகார ராசிக்காரர்கள் பங்கேற்று குருபகவானை வழிபட்டனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்புள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் நேற்று இரவு குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் பரிகார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதேபோல் சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் சிவன் கோவில்களில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. சமயபுரத்தில் உள்ள போஜீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் வைத்தி குருக்கள் தலைமையில் தட்சிணாமூர்த்திக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சமயபுரம், ஒத்தக்கடை, வி.துறையூர், மருதூர், மாகாளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை பயபக்தியுடன் வணங்கினர். அவர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திருப்பைஞ்சீலி, ஈச்சம்பட்டி, வாழ்மால்பாளையம், சிறுகாம்பூர், பழையூர், செங்கிலிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்களிலும் குரு பெயர்ச்சி விழா நடை பெற்றது.

Next Story