மராட்டிய மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ.5 குறைந்தது


மராட்டிய மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ.5 குறைந்தது
x
தினத்தந்தி 4 Oct 2018 11:45 PM GMT (Updated: 4 Oct 2018 11:45 PM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் ஏறக்குறைய பாதி அளவுக்கு வரிகளே இடம் பிடித்து விடுகின்றன.

புதுடெல்லி,

மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48-ம், டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33-ம் உற்பத்தி வரி விதித்து வருகிறது. அத்துடன், மாநில அரசுகள், மதிப்பு கூட்டு வரி என்ற பெயரில், அதிகபட்சமாக 39.12 சதவீதம்வரை வரி விதித்து வருகின்றன.

மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, பீப்பாய்க்கு 86 டாலராக உள்ளது. அதே சமயத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.77 ஆக சரிந்துவிட்டது.

இந்த காரணங்களால், பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதத்தில் இருந்து உயர்ந்தவண்ணம் இருக்கிறது. குறிப்பாக, ஆகஸ்டு மாதத்தில் இருந்து இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.86-ம், டீசல் விலை ரூ.6.73-ம் உயர்ந்துவிட்டது.

இதனால், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வந்தன. ஆனால், மத்திய அரசு வரியை குறைக்க மறுத்து வந்தது.

மாநில அரசுகளில், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தங்களது வரியை குறைத்தன.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தி, மக்களுக்கு நிவாரணம் அளிப்பது பற்றி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை நேற்றும் நீடித்தது. இதில், உற்பத்தி வரியை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பை பத்திரிகையாளர்களிடம் அருண் ஜெட்லி வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு தலா ரூ.1.50 வீதம் மத்திய அரசு குறைக்கிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், லிட்டருக்கு ரூ.1 வீதம் குறைக்க வேண்டும். எனவே, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 வீதம் குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு, வியாழக்கிழமை (நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

விலை குறைப்பால், மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.10 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

இதுபோல், மாநில அரசுகளும் தாங்கள் விதிக்கும் மதிப்பு கூட்டு வரியில் ரூ.2.50 வீதம் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதன்மூலம், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறையும். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு நான் கடிதம் எழுதுவேன்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதெல்லாம், மாநில அரசுகளுக்கு வருவாய் அதிகரித்தது. ஆகவே, லிட்டருக்கு ரூ.2.50 விலையை குறைப்பது எளிதானதுதான். எந்த கட்சியின் தலைவர்கள், மக்கள் மீது பரிதாப்படுவதுபோல், வெறும் வாயளவில் பேசினார்கள் என்பதை தெரிந்துகொள்ள இது ஒரு பரீட்சை.

கடந்தமுறை கூட பா.ஜனதா கூட்டணி ஆளும் மாநிலங்கள் மட்டுமே வரியை குறைத்தன. இந்த தடவை மற்ற மாநிலங்கள் வரியை குறைக்காவிட்டால், அவர்களை மக்கள் கேள்வி கேட்பார்கள்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை, முன்பை விட வலுவாக உள்ளது. எனவே, அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் நிலையில்தான் உள்ளனர். அதற்காக, விலை நிர்ணய உரிமையை அவர்களிடம் இருந்து மத்திய அரசு பறிப்பதாக அர்த்தம் அல்ல.

மத்திய அரசுக்கு ரூ.10 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு என்பது நிதி பற்றாக்குறையில் 0.05 சதவீதம் மட்டுமே ஆகும். எனவே, இலக்கு நிர்ணயித்தபடி, 3.3 சதவீதத்துக்குள் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தி விடுவோம்.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

மத்திய அரசு இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை தலா 2 ரூபாய் குறைத்தது. அதன்பிறகு, இப்போதுதான், வரி குறைப்பு செய்யப்படுகிறது. இது, நரேந்திர மோடியின் 4½ ஆண்டு ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 2-வது உற்பத்தி வரி குறைப்பு ஆகும்.

மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து மராட்டிய அரசும் பெட்ரோல் மீதான மதிப்பு கூடுதல் வரியை லிட்டருக்கு ரூ.2.50 குறைத்தது. இந்த அறிவிப்பை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார்.

மத்திய, மாநில அரசுகள் வரிகுறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து, மராட்டியத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைந்து உள்ளது.

ஆனால் டீசல் மீதான மதிப்பு கூடுதல் வரியை மராட்டிய அரசு குறைக்கவில்லை. இந்த வரிகுறைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநில நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் டீசல் விலை மத்திய அரசின் அறிவிப்பின் படி ரூ.2.50 மட்டுமே குறைந்து உள்ளது.

இதேபோல சில மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீது தாங்கள் விதிக்கும் மதிப்பு கூட்டு வரியை குறைப்பதாக அறிவித்தன.

பா.ஜனதா ஆளும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், ஜார்கண்ட், அசாம், உத்தரகாண்ட், அரியானா, இமாசலபிரதேசம், சத்தீ‌ஷ்கார் மற்றும் அருணாசலபிரதேசம், கா‌ஷ்மீர் ஆகிய மாநிலங்கள், பெட்ரோல், டீசல் மீதான வரியை தலா ரூ.2.50 குறைப்பதாக அறிவித்தன.

மத்திய, மாநில அரசுகளின் வரி குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து மராட்டியத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைந்தது. டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தபோதிலும், மராட்டிய அரசின் வரி குறைக்கப்படவில்லை.

Next Story