116 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகள் கலெக்டர் வழங்கினார்


116 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Oct 2018 10:15 PM GMT (Updated: 5 Oct 2018 8:03 PM GMT)

116 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகளை கலெக்டர் வழங்கினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், விவசாயிகளுக்கு விலையில்லா நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி கெங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட மெட்டுக்கல்லில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி 116 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகளை வழங்கி பேசியதாவது:–

நீலகிரி மாவட்டம் இயற்கையும், பசுமையும் நிறைந்த மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது விவசாயம் தான். மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு, இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் முயற்சி செய்ய வேண்டும். இயற்கை விவசாயம் மேற்கொள்ள செலவு மிகவும் குறைவு ஆகும். இங்கு உள்ள விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும் இருக்கிறீர்கள். வருங்கால சந்ததியினருக்கு கல்வி அறிவு முக்கியமான ஒன்று. எனவே, தங்களது குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, அவர்கள் நல்ல நிலையை அடைந்து விவசாயிகளுக்கும், சமுதாயத்துக்கும் பயன் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேனீ வளர்ப்பிற்காக 200 தேனீ வளர்ப்பு பெட்டிகளை செய்து கொடுத்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 750க்கான காசோலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சாந்திராமு எம்.எல்.ஏ., தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், உதவி இயக்குனர் மீராபாய், கோத்தகிரி தாசில்தார் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட காந்தல் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் தூய்மை பணி குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story