அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் கலெக்டர் ராஜாமணி திறந்து வைத்தார்


அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் கலெக்டர் ராஜாமணி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 5 Oct 2018 10:00 PM GMT (Updated: 5 Oct 2018 10:00 PM GMT)

மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆய்வகத்தை கலெக்டர் ராஜாமணி திறந்து வைத்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆய்வகத்தை மாணவிகளின் பயன்பாட்டுக்காக கலெக்டர் ராஜாமணி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கல்வியை முழுஅளவில் கற்பிப்பதற்கு பள்ளிகளில் அறிவியல் கல்வியை செயல்முறையோடு ஆராய்ச்சி செய்யக் கூடிய வகையில் இந்த ஆண்டு முதல் மத்திய அரசு அடல் அறிவியல் ஆய்வகத்தை வழங்கி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் மூவானூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் இந்த வசதியை பெற்றுள்ளன. மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யானது ஆய்வக பயன்பாட்டில் இந்திய அளவில் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

ஆய்வகம் அமைப்பதற்காக ரூ.10 லட்சமும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு செலவுக்காக ரூ.10 லட்சமும் என ரூ.20 லட்சம் ஆய்வக பயன்பாட்டுக்கு நிதி வழங்கப்படுகிறது. மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருச்சி மாவட்டத்தில் முன்மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து கொடுக்கப்படும். முன்மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த பள்ளிக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதி வழங்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் குறுவளமையத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், லால்குடி மாவட்ட கல்வி அதிகாரி அறிவழகன், பள்ளி தலைமைஆசிரியை ஆரோக்கியமேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story