கூட்டுறவு சங்க தேர்தல்: தி.மு.க.வேட்பாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


கூட்டுறவு சங்க தேர்தல்: தி.மு.க.வேட்பாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Oct 2018 11:00 PM GMT (Updated: 6 Oct 2018 7:47 PM GMT)

கூட்டுறவு சங்க தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று காலை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல் செய்ய அலுவலக வாசலில் காத்திருந்தனர்.

இதையடுத்து முதலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன், பழனிச்சாமி, கமல் உள்பட 11 பேரை வேட்புமனு தாக்கல் செய்ய போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி கூடுதல் துணை சூப்பிரண்டு அன்பழகன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி வழங்கவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி மெய்யநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யவதற்காக அக்கட்சியினர் கையில் மாலையுடன் நேற்று மதியம் மீண்டும் அங்கு வந்தனர். இதையடுத்து போலீசார் நேரம் முடிந்து விட்டது என கூறி மெய்யநாதன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களை உள்ளே செல்ல விடாமல் தடுப்பு கட்டை அமைத்து தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க.வினர் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பி விட்டு வேட்புமனு தாக்கல் செய்யாமல் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அறந்தாங்கி் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. இதில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பெரியசாமி உள்பட 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சங்கிலிமுத்துகருப்பையா, செல்வராஜ் ஆகியோரை தேர்தல் அதிகாரி உள்ளே இல்லை என்று காரணம் கூறி போலீசார் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் காத்திருந்தனர்.

பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சங்கிலிமுத்துகருப்பையா, அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், அறந்தாங்கி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தேர்தலில் போட்டியிட நான் உள்ளிட்ட 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய காலை சென்றோம். அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரி இல்லை. இதனால் நாங்கள் காலையில்் இருந்து மாலை வரை அங்கேயே காத்திருந்தும் அதிகாரி வரவில்லை. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்ய படிவம்-18 கிடைக்காததால், நாங்கள் வெளியில் இருந்து வாங்கி வந்து இணைத்துள்ளோம். நான் அந்த சங்கத்தின் முன்னாள் தலைவர். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

Next Story