மாவட்டம் முழுவதும் தொடர் மழை: 3 இடங்களில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது


மாவட்டம் முழுவதும் தொடர் மழை: 3 இடங்களில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 6 Oct 2018 11:30 PM GMT (Updated: 6 Oct 2018 8:43 PM GMT)

மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது. இதில் 3 இடங்களில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.

விழுப்புரம்,

அரபிக்கடலின் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருந்ததன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி மாலையில் இருந்து பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு மேல் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது.

இந்த மழை இடைவிடாமல் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்தது. பின்னர் நள்ளிரவு 12 மணி முதல் விடிய, விடிய சாரல் மழையாக பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையின்போது விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களில் நள்ளிரவில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

பலத்த மழையின் காரணமாக விழுப்புரம் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அதுபோல் தாழ்வான பகுதிகளான விழுப்புரம் எஸ்.பி.எஸ். நகர், வி.ஜி.பி நகர், தேவநாதசாமி நகர், மணி நகர், சுதாகர்நகர், கம்பன் நகர், கணபதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

அதேபோல் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகளவில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கீழ்பெரும்பாக்கம், கட்டபொம்மன் நகர், இந்திரா நகர், எருமனந்தாங்கல், பொய்யப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த மக்கள் 3 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு காகுப்பம் சாலை வழியாக விழுப்புரம் நகருக்கு வந்து செல்கின்றனர்.

தொடர் மழையினால் விழுப்புரம் பகுதியில் நடைபெற்று வரும் கோலியனூரான் வாய்க்கால் சீரமைக்கும் பணி முற்றிலும் தடைபட்டுள்ளது. அதுபோல் விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக விழுப்புரம் அருகே சுந்தரிப்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டு, பஞ்சமாதேவி, வாணியம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மழையின் காரணமாக கோலியனூர், வனத்தாம்பாளையம், கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நெல் வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள களமருதூர், பிள்ளையார்குப்பம், சேந்தநாடு, எலவனாசூர்கோட்டை, மடப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின்போது நேற்று அதிகாலை 4.30 மணிக்கு உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு அங்காளம்மன் கோவில் அருகே உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஜெயராமன் (வயது 56), அவரது மனைவி வீரம்மாள் (48) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செஞ்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பாடிப்பள்ளம் கிராமத்தில் கண்ணன் மனைவி தனம்மாள் என்பவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அங்கே கட்டி வைக்கப்பபட்டு இருந்த 3 ஆடுகள் சுவரின் இடிபாட்டிற்குள் சிக்கி இறந்து போனது. இதேபோல் பாலப்பட்டு கிராமத்தில் நாகம்மாள் என்பவரது வீட்டு மாட்டு கொட்டகை இடிந்து விழுந்ததில், கன்று குட்டி ஒன்று பரிதாபமாக செத்தது. இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மழை பாதிப்புகள் குறித்து தாசில்தார் ரங்கநாதன் தலைமையில் வருவாய்த்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தாலும், நேற்று காலை 9 மணிக்கு மேல் வெயில் அடிக்க தொடங்கியது. மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

மரக்காணம் பகுதியில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே மழை எச்சரிக்கை விடுத்து இருந்ததால் மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 87 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தில் ஏனைய இடத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வானூர்    - 56

திருக்கோவிலூர்    - 44

செஞ்சி    -43

உளுந்தூர்பேட்டை    - 43

திண்டிவனம்    - 41

சங்கராபுரம்    - 38

கள்ளக்குறிச்சி    - 32.40

மரக்காணம்    - 20


Next Story