மோசடி புகாரில் கட்டப்பஞ்சாயத்து : 6 போலீசார் பணி இடைநீக்கம்


மோசடி புகாரில் கட்டப்பஞ்சாயத்து : 6 போலீசார் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 6 Oct 2018 11:06 PM GMT (Updated: 6 Oct 2018 11:06 PM GMT)

மோசடி புகாரில் கட்டப்பஞ்சாயத்து செய்த 6 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

மும்பை,

மும்பை பாந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் காசிப் கான். இவர் மீது பிரையன் என்ற தொழில் அதிபர் கொடுக்கல் வாங்கல் தகராறில் ரூ.22 லட்சம் மோசடி புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இது தெரியாமல் காசிப் கான் வேறு ஒரு பிரச்சினை தொடர்பாக சம்பவத்தன்று பாந்திரா போலீஸ் நிலையத்திற்கு சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த போலீஸ்காரர்கள் கஜனன், தனாஜி, ஸ்ரீதன், குந்தன், அனில், சித்தேஷ் ஆகியோர் காசிப் கானை முறையாக கைது செய்யாமல் சிறைப்பிடித்து வைத்து உள்ளனர்.

மேலும் அவர் மீது மோசடி புகார் அளித்து இருந்த பிரையனை வரவழைத்து உள்ளனர். பின்னர் போலீசார் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்சினை குறித்து 2 பேருக்கும் இடையே கட்டப்பஞ்சாயத்து பேசி உள்ளனர்.

அப்போது போலீசார் பிரையனுக்கு முதலில் ரூ.7 லட்சத்தை கொடுக்குமாறு காசிப் கானை மிரட்டி உள்ளனர். பின்னர் ரூ.35 லட்சம் கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு காசிப் கானை போலீஸ்நிலையத்தில் இருந்து விட்டு உள்ளனர்.

இதுகுறித்து அவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இதையடுத்து நடந்த துறைரீதியான விசாரணையில், போலீசார் சட்டவிரோதமாக தொழில் அதிபரை 6 மணி நேரம் போலீஸ் நிலையத்தில் சிறைப்பிடித்து வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 6 போலீசாரையும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

Next Story