தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்


தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 7 Oct 2018 11:00 PM GMT (Updated: 7 Oct 2018 5:14 PM GMT)

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குவதற்கான சிறப்பு முகாம் 3-ம் கட்டமாக நேற்று நடந்தது. சென்னையில் 3 ஆயிரத்து 754 மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.

சென்னை,

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில், 1.1.2019-ம் தினத்தை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, கடந்த மாதம் 1-ந்தேதி முதல் வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் ஒரே தொகுதிக்குள் இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான படிவங்களை வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் ஒரே தொகுதிக்குள் இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு பொதுமக்களுக்கு ஏதுவாக தமிழகம் முழுவதும் 4 கட்ட சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாதம் 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்தநிலையில் 3-ம் கட்ட சிறப்பு முகாம் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 644 வாக்குச்சாவடிகளில் நடந்தது. தலைநகர் சென்னையில் 3 ஆயிரத்து 754 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு-நீக்கல் முகாம் நடந்தது. இந்த முகாமில் வரும் ஜனவரி மாதம் 1-ந்தேதி அன்று 18 வயதை பூர்த்தி அடையக்கூடிய நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.

சிறப்பு முகாமில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளித்தனர். பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய படிவம் 8 மற்றும் ஒரே தொகுதிக்குள் இடம் மாறி இருந்தால் படிவம் 8-ஏ ஆகியவையும் முகாம்களில் வழங்கப்பட்டது.

சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளி மற்றும் செனாய்நகரில் உள்ள திரு.வி.க. மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு-நீக்கம் முகாமை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும் (பொறுப்பு), மாநகராட்சி துணை கமிஷனருமான ஆர்.லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து அங்கிருக்கும் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அவருடன் மாநகராட்சி மண்டல அதிகாரி பரந்தாமன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். இதுபோல ஆங்காங்கே நடந்த முகாம்களை தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சிறப்பு முகாம்களில் பெற்ற பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களை வருகிற 31-ந்தேதி வரை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதைப்போல் www.elections.tn.gov.in மற்றும் nvsp.in ஆகிய ‘ஆன்-லைன்’ முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

4-வது மற்றும் கடைசி வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு-நீக்கல் முகாம் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story