3,288 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் - கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு


3,288 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் - கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2018 11:21 PM GMT (Updated: 7 Oct 2018 11:21 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 3,288 வாக்குச்சாவடிகளில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. பெயர் சேர்க்கும் பணியை சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு செய்தார்.

சேலம்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்வதற்கான முகாம் நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, வீரபாண்டி, சங்ககிரி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3,288 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. இதில் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்க ஆர்வம் காட்டினர்.

சேலம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெயராணி மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நெய்க்காரப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, கலெக்டர், அங்கிருந்த முகவர்களிடம் விண்ணப்பம் முறையாக வழங்கப்படுகிறதா? தேவையான விண்ணப்பங்கள் உள்ளதா? என கேட்டறிந்தார். மேலும், வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 3,288 வாக்குச்சாவடிகளில் இதுவரை நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 31,259 பேரும், பெயர்களை நீக்கம் செய்ய 8,573 பேரும், திருத்தம் செய்வதற்கு 3,907 பேரும், முகவரி மாற்றம் செய்வதற்கு 3,007 பேரும் என மொத்தம் 46 ஆயிரத்து 746 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது. சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களும் சேர்த்து அந்தந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகுதியான அனைத்து விண்ணப்ப படிவங்களும் ஏற்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் உரிய பதிவுகளும் மேற்கொள்ளப்படும்.

இதுபோன்று நடக்கும் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்காத நபர்கள் வாக்காளர்களாக சேர்த்துக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் முழுமையான வாக்காளர் பட்டியலை உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின்போது சேலம் உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெகநாதன், கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் சுந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story