திருப்பூர் அருகே பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: மர்ம ஆசாமிகள் கைவரிசை


திருப்பூர் அருகே பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 8 Oct 2018 10:00 PM GMT (Updated: 8 Oct 2018 9:06 PM GMT)

திருப்பூர் அருகே பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

அனுப்பர்பாளையம், 


திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35). பனியன் நிறுவன உரிமையாளர். இவருடைய மனைவி மாலதி (30). கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு ராஜபாளையத்திற்கு சென்றார்.

பின்னர் நேற்று அதிகாலை அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு படுக்கையறையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிகள் சிதறி கிடந்தன.

மேலும் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன. இதுபற்றி அனுப்பர்பாளையம் போலீசாருக்கு சந்திரசேகர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், சந்திரசேகர் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த நகை- பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை தடவியல் நிபுணர்கள் சேகரித்தனர். மேலும் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story