இடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆலோசனை


இடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆலோசனை
x
தினத்தந்தி 9 Oct 2018 11:00 PM GMT (Updated: 9 Oct 2018 5:14 PM GMT)

இடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆலோசனை நடத்தினார். அப்போது தனித்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

பெங்களூரு,

கர்நாடக சட்டமன்றத்தில் காலியாக உள்ள ராமநகர், ஜமகண்டி ஆகிய தொகுதிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 16-ந் தேதி வரை மனு தாக்கல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, ரிஸ்வான் எம்.எல்.சி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இடைத்தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொண்டர்களை உற்சாகப்படுத்த இந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதே சிறந்தது என்று தலைவர்களில் ஒரு பிரிவினர் தெரிவித்தனர். மற்ற சிலர், கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ராமநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய அந்த நிர்வாகிகள், எக்காரணம் கொண்டும் ராமநகர் தொகுதியில் கூட்டணி அமைக்க வேண்டாம் என்றும், தொண்டர்களை உற்சாகப்படுத்த தனித்து போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த விஷயத்தில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் கூடி ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து, சிவமொக்கா, பல்லாரி, பாகல்கோட்டை மாவட்டங்களின் நிர்வாகி களுடனும் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே முன்னாள் மந்திரி கிம்மனே ரத்னாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் தான் உள்ளன. இந்த நிலையில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 4 மாதங்கள் மட்டுமே பதவி காலம் உள்ளது.

அதனால் வெற்றியாளர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று அந்த கட்டிடத்தின் கம்பங்களை மட்டுமே பார்த்துவிட்டு திரும்ப வேண்டும். வேறு எதையும் சாதிக்க முடியாது. மேலும் நாட்டில் வேறு மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

கர்நாடகத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பணம் மற்றும் திறன் தான் வீணாகும். அதனால் நாடாளுமன்ற இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு கிம்மனே ரத்னாகர் கூறினார்.

Next Story