30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி முதல் நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி முதல் நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 9 Oct 2018 10:45 PM GMT (Updated: 9 Oct 2018 7:19 PM GMT)

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி முதல் நியாயவிலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் தஞ்சை மண்டல (தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டம்) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட விளக்க கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் நெடுஞ்செழியன், மாவட்ட தலைவர் பாஸ்கர், செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பொதுவினியோகத்திட்டத்திற்கென தனித்துறை ஏற்படுத்த வேண்டும். நுகர்பொருள் வாணிக கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம், பணிவரன்முறை, 100 சதவீதம் பொருட்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பலமுறை போராட்டம் நடத்தி 10 முறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் காணவில்லை. அவர்கள் பரிந்துரைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

எனவே முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். வேலை நிறுத்தப்போராட்டத்தையொட்டி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் ஆர்ப்பாட்டமும், அடுத்தடுத்த நாட்களில் தொடர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் தஞ்சை மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

Next Story