சுத்தமான குடிநீர் வழங்க கோரி குளச்சல் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சுத்தமான குடிநீர் வழங்க கோரி குளச்சல் நகராட்சி அலுவலகத்தை  பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 Oct 2018 10:45 PM GMT (Updated: 10 Oct 2018 4:06 PM GMT)

சுத்தமான குடிநீர் வழங்க கோரி குளச்சல் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

குளச்சல்,

குளச்சல் நகராட்சிகுட்பட்ட  கொட்டில்பாடு, சுனாமி காலனி, சிங்காரவேலர் காலனி, அந்தோணியார் காலனி, களிமார், பி.எஸ்.புரம், கிரீன்தெரு, ஈழக்காணி தெரு, முகைதீன் பள்ளி தெரு, வாய்க்கால் தெரு ஆகிய பகுதி மக்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக உப்பான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களால் குடிக்க முடியவில்லை.

 எனவே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் குளச்சல் நகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டனர். பின்னர் அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர். போராட்டத்தில் குளச்சல் நகர தி.மு.க.பொறுப்பாளர் ரகீம், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பனிக்குருசு, முன்னாள் கவுன்சிலர்கள் நூர்முகம்மது, லாரன்ஸ், நசீம், ஜெயக்குமார், சுரேஷ், டென்னிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் சப்– இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நகராட்சி பொறியாளர் சுரேஷ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் விரைவில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கான பணிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைதொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story