நெல்லையில் மாணவர்கள் மீது தடியடி: அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் மாணவர்கள் மீது தடியடி: அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2018 11:00 PM GMT (Updated: 10 Oct 2018 4:42 PM GMT)

நெல்லையில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இலவச பஸ்பாஸ் வழங்க வலியுறுத்தியும் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள், கல்லூரி நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதற்கு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் பெடல்காஸ்ட்ரோ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி முன்னிலை வகித்தார். இதில் 1,500–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றால் உடனடியாக கைது செய்வதற்காக கல்லூரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதனால் கல்லூரி வளாகத்தை விட்டு மாணவர்கள் வெளியே வராமல் உள்ளேயே அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள் சென்று மாணவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவ, மாணவிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story