திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி வீட்டின் மேற்கூரையை சீரமைத்தபோது பரிதாபம்


திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி வீட்டின் மேற்கூரையை சீரமைத்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 10 Oct 2018 11:00 PM GMT (Updated: 10 Oct 2018 5:26 PM GMT)

திருவாரூர் அருகே வீட்டின் மேற்கூரையை சீரமைத்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற பெண் படுகாயம் அடைந்தார்.

திருவாரூர்,

திருவாரூர் நகர் மருதப்பாடி பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் மாரிமுத்து(வயது 28). இவர் வீடுகளில் கீற்று கொட்டகை அமைக்கும் வேலை செய்து வந்தார். இவரது வீட்டின் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு சீட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்தது.

இதனால் மேற்கூரையை சீரமைக்கும் பணியில் மாரிமுத்து ஈடுபட்டார். இந்த பணி முடிந்த பின்னர் கூரையில் இருந்து இறங்க முயற்சித்த மாரிமுத்து அருகே உள்ள இரும்பினால் ஆன கொடிகம்பியை பிடித்தார். அப்போது அந்த கம்பி அருகில் இருந்த மின் கம்பியுடன் உரசியது. இதனால் மாரிமுத்துவை மின்சாரம் தாக்கியது.


உடனே மாரிமுத்து அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி கனகா, மாரிமுத்துவை காப்பாற்ற முயன்று அவரை தொட்டார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. அந்த நேரத்தில் அவர்களின் வீட்டுக்கு வந்த திருவாரூர் புதுத்தெருவை சேர்ந்த பந்தல் காண்டிராக்டர் சுப்பிரமணியன்(52) உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாரிமுத்துவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது.

இதில் மாரிமுத்து, சுப்பிரமணியன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கனகா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் டவுன் போலீசார் மாரிமுத்து, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த கனகாவை சம்பவ இடத்தில் இருந்து மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் திருவாரூர் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story