திருவண்ணாமலையில் : போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேர் கைது - மாவட்ட நீதிபதி நேரடி ஆய்வில் சிக்கினர்


திருவண்ணாமலையில் : போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேர் கைது - மாவட்ட நீதிபதி நேரடி ஆய்வில் சிக்கினர்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:00 PM GMT (Updated: 10 Oct 2018 8:17 PM GMT)

திருவண்ணாமலையில் போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,


திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வழக்கு கோப்புகளில் பயன்படுத்தப்படும் ரப்பர் ஸ்டாம்ப் போலியானது என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி விசாரணை மேற்கொண்டார். அதில் நீதிமன்ற வழக்கு கோப்புகளில் பயன்படுத்தப்பட்ட ரப்பர் ஸ்டாம்ப் போலியானது என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இவை திருவண்ணாமலை பெரியார் சிலை, கட்டபொம்மன் தெரு, மத்தலாங்குளத்தெருவில் உள்ள ஜெராக்ஸ், ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடைகளில் அரசு அனுமதியின்றி தயாரிக்கப்படுகிறது என்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள 3 கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த கடைகளில் அரசு அனுமதியின்றி நீதிபதி, அரசு அலுவலர்கள் சார்ந்த போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்து போலி ரப்பர் ஸ்டாம்ப்களை நீதிபதிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவற்றை தயாரித்த அரிகிருஷ்ணன் (வயது 32), கதிரேசன் (49), டெல்லிபாபு (35) ஆகிய 3 பேரையும் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு, டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story