புதுவை அரசு ஆஸ்பத்திரியில் மருந்துகள் தட்டுப்பாடு - சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


புதுவை அரசு ஆஸ்பத்திரியில் மருந்துகள் தட்டுப்பாடு - சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Oct 2018 11:00 PM GMT (Updated: 10 Oct 2018 8:32 PM GMT)

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று நோயாளிகளை சந்தித்தார். ஆஸ்பத்திரியின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று நோயாளிகளிடம் குறைகேட்டார். அப்போது மாநில துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது பல நோயாளிகள் சிகிச்சை பெற படுக்கை இல்லாமல் தரையில் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிலர் மருந்து மாத்திரைகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.

அதன்பின் அவர்கள் மருத்துவ கண்காணிப்பாளர் மோகன்குமாரை சந்தித்து பேசினார்கள். அரசு ஆஸ்பத்திரியில் நிலவும் குறைகளையும் சுட்டிக்காட்டினார்கள். அவர்களிடம் கண்காணிப்பாளர் மோகன்குமார், 150 ஆண்டுகள் பழமையான அரசு ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் நோயாளிகள் இங்கு வருகின்றனர். அவர்களை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு போக சொல்லவும் முடியவில்லை. அங்கு செல்ல சொன்னால் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவை அரசு ஆஸ்பத்திரி தொடர்பாக எங்களுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு ஆய்வுக்கு வந்தேன். இங்கு நோயாளிகளை போதிய படுக்கை வசதியின்றி தரையில் படுக்க வைத்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தையைக்கூட தரையில் படுக்க வைத்துள்ளார்.

2½ ஆண்டாக லிப்ட் இயங்கவில்லை. அதில் குப்பையை கொட்டி வைத்துள்ளனர். அதேபோல் மருந்துகள் தட்டுப்பாடும் உள்ளது. நிதி நெருக்கடி என்று கூறி ஆட்சியாளர்கள் மருத்துவமனையின் செயல்பாட்டை முடக்கிவிட்டனர்.

ஏழை மக்கள் அரசு ஆஸ்பத்திரியை நம்பி வருகின்றனர். அவர்களுக்கு ஆட்சியாளர்கள் துரோகம் செய்யக்கூடாது. கவர்னர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்யவேண்டும். அனைத்து விதமான நோயாளிகளையும் ஒரே இடத்தில் தங்க வைத்துள்ளனர். நோய் தீர்க்கும் அரசு மருத்துவமனை தொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறியுள்ளது.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story