ஓட்டுனர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் வட்டார போக்குவரத்து அலுவலகம் தகவல்


ஓட்டுனர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் வட்டார போக்குவரத்து அலுவலகம் தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:30 PM GMT (Updated: 10 Oct 2018 9:20 PM GMT)

ஓட்டுனர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2012-ம் ஆண்டு முதல் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் வரி இணையதளம் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும், அதாவது பெயர் மாற்றம் செய்தல், உரிமம் மாற்றம் செய்தல், தவணை கொள்முதல் மற்றும் தவணை ரத்து செய்தல் போன்ற அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் மனு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது விண்ணப்பதாரர் அதற்குரிய கட்டணத்தை மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரடியாக சென்று செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 1.10.2018 முதல் ஓட்டுனர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கான, அதாவது பழகுனர் உரிமம், நிரந்தர ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம், முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுனர் உரிமம் பெறுதல் கட்டணம் முழுவதுமாக மனுதாரர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து செயல்படுத்தும் வசதி போக்குவரத்துத்துறையால் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மனுதாரர்கள் https://pa-r-iv-a-h-an.gov.in/sar-at-h-is-e-r-i-c-e-c-ov6/sar-at-h-i-h-o-m-e-pu-b-l-ic.do என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி பயன்பெறலாம்.

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மனுவை பூர்த்தி செய்த பிறகு, அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் வங்கி இணைய சேவை மூலமாக, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாக, விண்ணப்பத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை இணையதளம் மூலம் ரசீதை உருவாக்கி அதை அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டை அல்லது பணம் கட்டிய ரசீதுடன் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று தகுந்த பயிற்சியில் கலந்து கொண்டு, புகைப்படம் எடுத்து உரிமத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தினால் அலுவலக பணியாளர்களுக்கு பணிச்சுமை குறைந்து, இதர பணிகளில் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற முடியும். இதே போன்று வட்டார போக்குவரத்து அலுவலக பணிகள் அனைத்தும் படிப்படியாக ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்யவும், சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story