மாநகராட்சியை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


மாநகராட்சியை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:45 PM GMT (Updated: 10 Oct 2018 9:43 PM GMT)

திருச்சி மாநகர சிறுகடை, தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மலைக்கோட்டை,

திருச்சி மாநகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆயிரம் கோடிக்கும் மேல் நிதியும் ஒதுக்கியுள்ளது.இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில், திருச்சியின் முக்கிய கடைவீதி பகுதிகளான, என்.எஸ்.பி. ரோடு, சிங்காரத்தோப்பு, நந்தி கோவில் தெரு, சூப்பர் பஜார் உள்ளிட்ட மாநகராட்சி முக்கிய பகுதிகளில் உள்ள தரைக்கடைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மேலும், அந்த பகுதியில் கடைகள் வைத்துள்ள பெரு முதலாளிகள், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளதை கண்டு கொள்ளவில்லை. இதனை கண்டித்து, திருச்சி மாநகர சிறுகடை, தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்சார்தீன் தலைமை தாங்கினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, சிவா, திராவிடமணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநகராட்சியை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். 

Next Story