ஊழல்கள் குறித்து வீடுகள் தோறும் பிரசாரம் செய்ய வேண்டும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேட்டி


ஊழல்கள் குறித்து வீடுகள் தோறும் பிரசாரம் செய்ய வேண்டும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 11 Oct 2018 11:00 PM GMT (Updated: 11 Oct 2018 7:55 PM GMT)

ஊழல்கள் குறித்தும் வீடுகள் தோறும் பிரசாரம் செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் கூறினார்.

தாமரைக்குளம்,

அரியலூரில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி தலைவர்கள் பிரதிநிதிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சிரிவெல்ல பிரசாத் கலந்துகொண்டு வாக்குச்சாவடி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஆலோசனைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது, தேர்தலுக்கான பிரசாரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து வீடுகள் தோறும் காங்கிரஸ் கட்சியினர் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும்.

கடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற மக்கள் நல திட்டங்கள், வேலைவாய்ப்புகள், நாட்டின் பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து வாக்காளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் நிர்வாகிகளின் கோரிக்கைகள் அனைத்தும் தலைமையிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், மாவட்ட முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி தலைவர் மாரியம்மாள் உள்பட மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story