குடகில் நெகிழ்ச்சி சம்பவம் கல்லூரி மாணவியின் உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு செய்து அடக்கம்


குடகில் நெகிழ்ச்சி சம்பவம் கல்லூரி மாணவியின் உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு செய்து அடக்கம்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:00 PM GMT (Updated: 11 Oct 2018 8:27 PM GMT)

குடகில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவியின் உடல் கிடைக்காததால், அவருடைய உருவ பொம்மையை உருவாக்கி, அதற்கு இறுதி சடங்கு நடத்தி உறவினர்கள் அடக்கம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

குடகு,

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் இடைவிடாது பலத்த மழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. ஏராளமான மக்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் பரிதவித்து வந்தனர்.

இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து இன்னும் நிவாரண முகாம்களில் தான் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், மடிகேரி அருகே ஜோடுபாலா பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டன. ஆனால் கல்லூரி மாணவியான மஞ்சுளா (வயது 17) என்பவரின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. அவருடைய உடலை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள், பொதுமக்கள், அவருடைய உறவினர்கள் தீவிரமாக ேதடினார்கள்.

ஆனால் எங்கு தேடியும் மஞ்சுளாவின் உடல் கிடைக்கவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள் மிகுந்த கவலையில் இருந்து வந்தனர். மஞ்சுளாவின் முகத்தை கடைசியாக கூட பார்க்க முடியவில்லை என்று வேதனை அடைந்திருந்தனர்.

இந்த நிலையில், மஞ்சுளாவின் உறவினர்கள், அவருடன் படித்த மாணவ-மாணவிகள் அவருடைய உருவ பொம்மையை உருவாக்கி இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு செய்தனர். பின்னர் அந்த உருவ பொம்மைக்கு மஞ்சுளாவின் உடைகள் அணிவிக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மஞ்சுளாவின் உறவினர்கள், தோழிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மஞ்சுளாவின் உருவ பொம்மைக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, மஞ்சுளா மாயமான இடத்தில் அந்த உருவ பொம்மை அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story