கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் 25-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் 25-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:00 PM GMT (Updated: 11 Oct 2018 8:43 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி முதல் சத்துணவு ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் சுந்தரம்மாள் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் நூர்ஜகான், பொருளாளர் பேயத்தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர்கள் அண்ணாதுரை, பாண்டி, தமிழரசன், சாவித்திரி, செயலாளர்கள் ஆண்டாள், பெரியசாமி, திருச்சி மாவட்ட தலைவர் எலிசபெத் ராணி, செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ஆரோக்கியசாமி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் தெரிவித்ததாவது:-

சத்துணவு ஊழியர்கள் வேலைக்கு வந்து 34 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை அரசு ஊழியர்களுக்கு இணையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு இணையான குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியாளர்கள் ஓய்வுபெறும் காலத்தில் ஒட்டுமொத்த தொகையாக(கிராஜுவிட்டி) ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்கப்பட வேண்டும்.தமிழகத்தில் சத்துணவுத்துறையில் 20 ஆயிரத்திற்கும் மேலான காலிப்பணியிடங்கள் உள்ளன. ஒரே அமைப்பாளர் 3 இடங்களில் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. எனவே, காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு மானியத்தொகை ஒரு நபருக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் சத்துணவுக்காக பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டருக்கான கூடுதல் தொகையை அரசு வழங்க வேண்டும் அல்லது அரசே சமையல் கியாஸ் சிலிண்டரை வழங்கிட வேண்டும். ஏற்கனவே நடந்த மாநில கூட்டத்தில் 3 கட்ட போராட்டம் நடத்திட அரைகூவல் விடுத்தோம். இதில் 2 கட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டம் நடத்தியதும் எங்களது மாநில நிர்வாகிகளை, அரசு அழைத்து பேசும் என்று நினைத்திருந்தோம். ஆனால், இதுவரை எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. எனவே, வருகிற 25-ந் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை நடத்துவது என்று மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது. எனவே, உடனடியாக மாநில நிர்வாகிகளை அழைத்து எங்களது வாழ்வாதார கோரிக்கைகளை அரசு செவிசாய்த்து பேச வேண்டும். அப்படி இல்லையென்றால் காத்திருப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும். மாநிலம் தழுவிய இந்த காத்திருப்பு போராட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story