நாடாளுமன்ற வேட்பாளர்கள் தேர்வு குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் சரத்பவார் இன்று ஆலோசனை


நாடாளுமன்ற வேட்பாளர்கள் தேர்வு குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் சரத்பவார் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 11 Oct 2018 11:45 PM GMT (Updated: 11 Oct 2018 9:42 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியாக போட்டியிட உள்ளனர். இந்த தேர்தலுக்காக முன்கூட்டியே இரு கட்சிகளும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக கட்சியின் மூத்த தலைவர்களுக்கு சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
தேர்தலுக்கான வேலைகளை தொடங்கும் முன் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சரத்பவார் ஆர்வமாக உள்ளார்.

காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் முடிந்துவிடும். பேச்சுவார்த்தையின்போது 3 அல்லது 4 இடங்களில் போட்டியிடுவது தொடர்பாக சர்ச்சை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிய கூட்டணி கட்சிகளுக்கு சில தொகுதிகளை ஒதுக்கவேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 இடங்களில் நாங்கள்(காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்) போட்டியிடுவதாக முன்பே முடிவு செய்து வைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story