காங்கேயம் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு


காங்கேயம் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 11 Oct 2018 10:00 PM GMT (Updated: 11 Oct 2018 10:00 PM GMT)

காங்கேயம் அருகே பட்டப்பகலில் பனியன் நிறுவன தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன்நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காங்கேயம், 


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படியூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் குண்டடம் நால்ரோட்டில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அன்புக்கரசி. நேற்று வழக்கம் போல் ரமேஷ் வேலைக்கு சென்று விட்டார். அதை தொடர்ந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அன்புக்கரசி மட்டும் வீட்டில் இருந்தார். அதன்பின்னர் அன்புக்கரசியும் காலை 11 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு மளிகை பொருட்கள் வாங்குவதற்கு காங்கேயம் சென்று விட்டார். பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு மாலை 4.30 மணிக்கு அன்புக்கரசி வீட்டிற்கு சென்றார்.

அப்போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அன்புக்கரசி வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவும் திறந்து கிடந்தது. இதில் வைத்து இருந்த 14 பவுன்நகை மற்றும் ரூ.28 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

இது குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்தவீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அன்புக்கரசி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட ஆசாமிகள், அவருடைய வீட்டிற்கு சென்று கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோ மீது இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காங்கேயம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story