ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு


ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு
x
தினத்தந்தி 11 Oct 2018 11:57 PM GMT (Updated: 11 Oct 2018 11:57 PM GMT)

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து உள்ளது.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 200 வளர்ப்பு கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவைகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தைக்கு ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து 300 பசு மாடுகள், 250 எருமை மாடுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.16 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.38 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதேபோல் பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.16 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.34 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் மாடுகளை விலைபேசி பிடித்து வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிச்சென்றனர். இதுகுறித்து சந்தை மேலாளர் முருகன் கூறும்போது, ‘கடந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு 750-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து உள்ளதால் மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனங்கள் எளிதில் கிடைக்கிறது. இதன் காரணமாக சந்தைக்கு இன்று (நேற்று) மாடுகள் வரத்து குறைந்துள்ளது’ என்றார்.

Next Story