மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி ஆர்ப்பாட்டம் - கொ.ம.தே.க.


மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி ஆர்ப்பாட்டம் - கொ.ம.தே.க.
x
தினத்தந்தி 12 Oct 2018 10:30 PM GMT (Updated: 12 Oct 2018 8:34 PM GMT)

மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி கொ.ம.தே.க. சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நேற்று ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி, தொழிற்சங்க தலைவர் எஸ்.ஜெகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கொங்குநாடு காக்கும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் காசியண்ணன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ஆர்.சதாசிவம், இலக்கிய அணி செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பாண்டியாறு–புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேட்டூர் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவினாசி–அத்திக்கடவு திட்டப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். மணியாச்சி–வழுக்குப்பாறை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். டி.என்.பாளையம் வேதபாறை தடுப்பணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. மேலும், மழைக்காலங்களில், மேட்டூர், பவானிசாகர், அமராவதி அணைகளில் தண்ணீர் நிரம்பி உபரியாக ஆற்றில் சென்று கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை ஏரி, குளம், குட்டைகளில் சேகரிக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஏரி, குளம், குட்டைகளை நிரப்ப வேண்டும். புதிதாக ஏரி, குளம், குட்டைகளை உருவாக்க வேண்டும். பொதுமக்களுக்கு தடையில்லாத குடிதண்ணீர் வழங்கவும், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் குறையின்றி வழங்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகளை வலியுத்தி கோ‌ஷங்களும் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி பேசும்போது, ‘விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னெடுத்து போராடும் கட்சிகளில் முன்னிலையில் இருப்பது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியாகும். விவசாயிகளுக்கு ஆதாரமாக இருக்கும் தண்ணீர் முறையாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கே நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் நியாயமானவை. இந்த கோரிக்கைகள் குறித்து ஊடகங்கள் விவாதம் நடத்த முன்வரவேண்டும். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றால் அரசு அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சென்னியப்பன், மாவட்ட செயலாளர்கள் பிரபாகரன், சிவராஜ், துரைராஜா, சாமிநாதன், முத்துசாமி, கொங்கு கோவிந்தராஜ், ஈஸ்வரமூர்த்தி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story