ஆண்டிமடம் அருகே ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீடுகளில் 21 பவுன் நகைகள்- ரூ.6 லட்சம் திருட்டு


ஆண்டிமடம் அருகே ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீடுகளில் 21 பவுன் நகைகள்- ரூ.6 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 12 Oct 2018 10:15 PM GMT (Updated: 12 Oct 2018 8:38 PM GMT)

ஆண்டிமடம் அருகே ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீடுகளில் 21 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சத்து 18 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பரணி மஹால் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 52). அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி அலமேலு(48). இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார். விக்னேஷ் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 13-ந் தேதி செல்வராஜ் வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் மகனுடன் திருப்பதி சென்றார். இந்நிலையில் நேற்று காலை செல்வராஜின் வீட்டில் வேலை செய்யும் பெண் அங்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, இது குறித்து அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார். அவர்கள் கவரப்பாளையத்தில் உள்ள செல்வராஜின் உறவினருக்கு தகவல் தெரிவத்தனர்.

அவர் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் கீழே சிதறி கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) மோகனதாஸ், ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.பின்னர் திருப்பதியில் உள்ள செல்வராஜிக்கு செல்போனில் தகவல் தெரிவித்து, அவரிடம் போலீசார் விசாரித்ததில் பீரோவில் ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் 6 பவுன் நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பீரோவில் பார்த்தபோது பணம் மற்றும் நகை இல்லை. இதனால் அவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

செல்வராஜின் மகள் திருமண செலவிற்கு வாங்கிய கடன்களை அடைப்பதற்காக, அவர் லோன் பெற்றுள்ளார். அந்த பணத்தை வீட்டில் வைத்துவிட்டு, திருப்பதி சென்று திரும்பி வந்த பின்னர், கடன் பெற்றவர்களிடம் பணத்தை கொடுக்கலாம் என்று எண்ணியுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை திருடி சென்றதால், செல்வராஜ் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளிவரை சென்று விருத்தாச்சலம் ரோட்டில் நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சூரக்குழி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் கொல்கத்தாவில் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சூரக்குழியில் உள்ள வீட்டில் அவருடைய மனைவி விஜி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த வீட்டின் மாடியில், அரசு அலுவலராக பணிபுரியும் அருள்மேரி வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் விஜி, தனது குழந்தைகளை திருக்களப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, சங்கரை காண கொல்கத்தா சென்றுள்ளார்.

விஜி வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மாடியில் தனியாக இருப்பதற்கு பயந்த அருள்மேரி நேற்று முன்தினம் இரவு பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் படுத்திருந்தார். நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவருடைய வீடு மற்றும் சங்கர் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இது குறித்த தகவலின்பேரில் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம், 15 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

மேலும் அருள்மேரி வீட்டின் கதவையும் உடைத்து வீட்டிற்குள் இருந்த ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து ஆண்டிமடம் போலீசார் தீவிர விசாரணை செய்து மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் ஆண்டிமடம் பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story