புதிய தொழில்கள் செய்யும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை


புதிய தொழில்கள் செய்யும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
x
தினத்தந்தி 13 Oct 2018 10:45 PM GMT (Updated: 13 Oct 2018 8:07 PM GMT)

புதிய தொழில்கள் செய்யும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கல்லூரி பட்டமளிப்பு விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

ஈரோடு,

ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் 7–வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். கல்லூரி ஆலோசகர் எஸ்.பி.விஸ்வநாதன், முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கல்லூரி முதல்வர் எம்.விஜயகுமார் ஆண்டு அறிக்கை படித்தார். விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு 377 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அதிவேகமாக செல்லும் காரின் வேகத்தை விட ஆயிரம் மடங்கு அதிக வேகத்தில் சுழலும் இந்த பூமியில் நாம் இருக்கிறோம். கருவில் உருவாகி 10 மாதங்கள் தாயின் கருவறையில் பாதுகாப்பாக இருந்து, இப்போது பூமித்தாயின் மடியில் பத்திரமாக இருக்கிறோம்.

இந்த உலகத்தில் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்து வந்த மனிதன் வீடு கட்டி குடியேறியதே பொறியியலில் வளர்ச்சி. நாம் பயன்படுத்தும் ஒளி விளக்கு, மின்சாரம், கணினி, செல்போன் என்று அனைத்தும் பொறியியலின் வளர்ச்சிதான். பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., சந்திரயான், மங்கள்யான் அனைத்தும் பொறியியலால் உருவாக்கப்பட்டவைதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் பொறியியலில் தேவை இருந்து கொண்டே இருக்கும். நாம் அனைத்தையும் கண்டுபிடித்து விடவில்லை. பெட்ரோலியம், டீசலுக்கு மாற்றான எரிபொருள், காற்று, நீரை மாசுபடுத்தாத, புகை இல்லாத நிறைய கண்டுபிடிப்புகள் தேவைப்படுகின்றன.

பள்ளிப்படிப்பு முடித்தபோது தமிழ் வழியில் கல்லூரியில் சேர விரும்பினேன். ஆனால் ஆங்கில வழி படிப்பு கிடைத்தது. அதையும் விரும்பி படித்தேன். அடுத்து ஐ.ஐ.டி.யில் சேர விரும்பினேன். ஆனால் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்தது. அதை ஏற்று நன்றாக படித்தேன். படித்து முடித்ததும் ஆராய்ச்சி படிப்புக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தந்தையின் கட்டளையை ஏற்று வேலைக்கு விண்ணப்பித்தேன். வேலை கிடைத்தது. அதுவும் பொள்ளாச்சியிலோ, கோவையிலோ கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் கிடைத்தது. அங்கு செயற்கைகோள் கட்டுமானத்துறையில் வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் செயற்கைகோள் இயக்கத்தை கவனிக்கும் பணி கிடைத்தது. அதையும் விரும்பி செய்தேன். நான் எனது வேலைகளை விரும்பி செய்ததால் 30–க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களின் கட்டுமான தலைவராக இருந்தேன். எனது 36 ஆண்டுகால பணியில் 80 செயற்கைகோள் கட்டுமானங்களை நிகழ்த்தினேன். இந்த வெற்றி எப்படி கிடைத்தது?. விரும்பியது கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்ததை விரும்பி ஏற்று பணி செய்தேன். நான் கொஞ்சம் அதிகமாக உழைத்தேன். நீங்களும் கொஞ்சம் அதிகமாக உழைத்தால் நாளை இந்த இடத்துக்கு வர முடியும்.

இன்று அனைவரும் புதிய வி‌ஷயங்களை தேடிப்பிடித்து படிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நேற்று இருந்த பல தொழில்கள் இன்று இல்லை. அதற்கு பதிலாக வேறு புதிய தொழில்கள் வந்து விட்டன. தொழில்நுட்பங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. 58 வயது ஓய்வு என்ற நிலை 40 வயது என்ற நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஓய்வூதியமும் இல்லாத நிலை இப்போது. ஆனால் மனித வாழ்வு 80 வயது, 90 வயது என்று உயர்ந்து கொண்டிருக்கிறது. எனவே வாழும் காலம் வரை வேலை செய்ய வேண்டும். அதற்கு புதிய தொழில்களை செய்யும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

முன்னதாக ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப் வரவேற்றார். முடிவில் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.திருமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story