விழுப்புரத்தில் சந்திரகாசி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது


விழுப்புரத்தில் சந்திரகாசி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 8:23 PM GMT)

விழுப்புரம் ரெயில் நிலைய யார்டில் சந்திரகாசி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.

விழுப்புரம்,

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், சென்னை வழியாக ஹவுராவிற்கு வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சந்திரகாசி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் புதுச்சேரியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் ரெயில் நிலையத்தை 8.30 மணிக்கு வந்தடையும்.

இதற்கிடையில் புதுச்சேரி ரெயில் நிலையத்தில் ரெயில்கள் பராமரிக்கும் இடவசதி (யார்டு) போதுமான அளவில் இல்லாததால் வாரந்தோறும் சந்திரகாசி எக்ஸ்பிரஸ் ரெயில் காலையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டுக்கு கொண்டு வரப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று அங்கிருந்து ஹவுராவிற்கு இயக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக சந்திரகாசி எக்ஸ்பிரஸ் ரெயில், விழுப்புரம் ரெயில் நிலைய யார்டு பகுதிக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ரெயிலின் 4-வது பெட்டியின் இடதுபக்க சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு தடம்புரண்டன. ரெயிலை சீரான வேகத்தில் இயக்கியதால் பெட்டி கவிழவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தடம்புரண்ட ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக ரெயில் என்ஜினுடன் சேர்ந்து இருந்த முதல் 3 பெட்டிகளை தனியாக கழற்றி விட்டனர். பின்னர் தடம்புரண்ட பெட்டிக்கு பின்புறமுள்ள மற்ற பெட்டிகளையும் தனியாக கழற்றி விட்டனர்.

அதனை தொடர்ந்து ‘ஹைட்ராலிக் ஜாக்கி’களை கொண்டு வந்து தடம் புரண்ட பெட்டியை தூக்கி தண்டவாளத்தில் நிலைநிறுத்தினர். இந்த பணிகள் முடிய 1 மணி நேரமானது. அதன் பிறகு ரெயில் என்ஜினுடன் அனைத்து பெட்டிகளும் இணைக்கப்பட்டு யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் அங்கிருந்து அந்த ரெயில் புதுச்சேரிக்கு சென்றது. இந்த சம்பவத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story