தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டனர்


தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டனர்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 9:37 PM GMT)

வருகிற தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி. ராணி தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் சுபசோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக் நவீத், மேற்கு மாவட்ட தலைவர் தனகோபால் ஆகியோர் வரவேற்று பேசினர்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான ஸ்ரீவெல்ல பிரசாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது :-

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பல்வேறு பொய் பிரசாரங்களை செய்து வெற்றிபெற்றது. அவர்கள் தந்த வாக்குறுதியில் பொதுமக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக கூறினார்கள், இதுவரை ஒரு பைசாகூட தரவில்லை.ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறினார்கள். தற்போது இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கைக்கு பிறகு பல சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் நடைபெறும் ஊழல் நிறைந்த மாநில அரசை மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி பின்னால் இருந்து இயக்கி வருகிறது. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து உள்ளேன். பொதுமக்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அனைத்து தரப்பு மக்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஜி.ஆர்.சுப்பிரமணியம், சீனிவாசன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மெய்ஞானமூர்த்தி, நகர காங்கிரஸ் தலைவர் ராம்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோ, குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story