கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது


கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது
x
தினத்தந்தி 14 Oct 2018 10:30 PM GMT (Updated: 14 Oct 2018 2:55 PM GMT)

கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு இருமுடி கட்டுடன் புனித யாத்திரை நேற்று தொடங்கியது. இந்த யாத்திரை நாளை (செவ்வாய்க்கிழமை) காளிமலையை சென்றடையும்.

கன்னியாகுமரி,

அருமனை அருகே பத்துகாணி காளிமலையில் பத்திரகாளிஅம்மன் கோவிலில் துர்காஷ்டமி திருவிழா நேற்று தொடங்கி வருகிற 18–ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் இருமுடிகட்டு மற்றும் புனிதநீர் சுமந்து புனித யாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.

இதன் தொடக்கவிழா கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் முன்பு நேற்று காலையில் நடந்தது. விழாவுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அன்பாலய நிறுவனர் ஸ்ரீகுருசிவசந்திரர் ஆசியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர். காந்தி, மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசா சோமன், துணை தலைவர் வக்கீல் அசோகன், இலங்கை அறங்காவலர் செலந்தில்வேள், திருமடங்களின் மாநில அமைப்பாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த யாத்திரை நேற்று விவேகானந்தபுரம், கொட்டாரம்,  சுசீந்திரம், நாகர்கோவில்,  பார்வதிபுரம் வழியாக தோட்டியோடு சென்றது. புனித யாத்திரையாக சென்றவர்கள் நேற்று இரவு தோட்டியோட்டில் தங்கினர். இன்று (திங்கட்கிழமை) தோட்டியோட்டில் இருந்து புறப்பட்டு தக்கலை, சாமியார்மடம், பம்மம், மார்த்தாண்டம், உண்ணாமலைகடை, ஆற்றூர் வழியாக சென்று தொழிச்சலில் தங்கும். அங்கிருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் புறப்பட்டு சிதறால், வெள்ளாங்கோடு, அருமனை, களியல், கடையாலுமூடு வழியாக பத்துகாணி காளிமலை பத்திரகாளி அம்மன் கோவிலை சென்றடையும். தொடர்ந்து, அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Next Story