ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்கக்கோரி விவசாயிகள் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்


ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்கக்கோரி விவசாயிகள் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
x
தினத்தந்தி 14 Oct 2018 10:30 PM GMT (Updated: 14 Oct 2018 9:10 PM GMT)

ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்க கோரி விவசாயிகள் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.

முசிறி,

முசிறி ஒன்றியம், திருத்தியமலை கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் திருத்தியமலை, பச்சனாம்பட்டி, நெய்வேலி, மணியம்பட்டி, வடக்கு அயித்தாம்பட்டி, ராயப்பட்டி, பூசாரிப்பட்டி, பொன்னாங்கன்னிபட்டி, மணலி அயித்தாம்பட்டி, மூவானூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறுகின்றன.

மழை, வெள்ள காலங்களில் அய்யாற்றிலிருந்து வீணாகும் மழைநீரை திருத்தியமலை ஏரிக்கு கொண்டு வர புதிய வாய்க்கால் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தியும், திருத்தியமலை ஏரி மற்றும் குளம், குட்டைகளை தூர்வார வேண்டும், ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் கிராமங்கள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தொடங்கி வைத்து பேசினார். இதில் திருத்தியமலை முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியசாமி, ஏரி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story