சம்பளம் வழங்க கோரி நகராட்சி-பேரூராட்சி அலுவலகங்களை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை


சம்பளம் வழங்க கோரி நகராட்சி-பேரூராட்சி அலுவலகங்களை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Oct 2018 11:00 PM GMT (Updated: 15 Oct 2018 7:43 PM GMT)

சம்பளம் வழங்ககோரி நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

தாமரைக்குளம்,

அரியலூர் நகராட்சியில் துப்புரவு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு கடந்த மாத சம்பளம் இதுநாள் வரை வழங்கவில்லை. மேலும் பிடிக் கப்படும் பி.எப். தொகைக்கான ரசீதோ ஆவணங்களோ காட்டப்படவில்லை. இதில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா என தெரியவில்லை என கூறி அரியலூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சியில் துப்புரவு பணியில் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். துப்புரவு பணியாளர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்க வில்லை என்றும், துப்புரவு பணியாளர்களை தரக்குறைவாக பேசி வருவதையும் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள், மகளிர்சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி முறையான சம்பளம் வழங்கப்படும், தரக்குறைவாக பேசிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story