மீண்டும் மோடி பிரதமர் ஆக முடியாது சரத்குமார் பேட்டி


மீண்டும் மோடி பிரதமர் ஆக முடியாது சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 15 Oct 2018 11:15 PM GMT (Updated: 15 Oct 2018 8:54 PM GMT)

மீண்டும் மோடி பிரதமர் ஆக முடியாது என கரூரில் அ.இ.ச.ம.க. நிறுவன தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் மற்றும் கரூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் விழா மற்றும் உடல்நல விழிப்புணர்வு விழா கரூர் அட்லஸ் கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு அந்த கல்லூரியின் தாளாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார். கரூர் கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் எம்.நாச்சிமுத்து தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் வீரப்பன், கரூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்க திட்ட தலைவர் மீனாசுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அ.இ.ச.ம.க. நிறுவன தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். முடிவில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) புஷ்பராணி நன்றி கூறினார். இந்த விழாவில் மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என ஆகமவிதி இருக்கிறபோது, பாலின சமத்துவத்தை சுட்டி காட்டி பெண்களை அங்கு அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஏற்புடையதல்ல.

சபரிமலைக்கு என புனிதம் இருக்கிறது. அதனை காத்திட வேண்டும். சில கோவில்களில் ஆண்கள் சட்டையை கழற்றி விட்டு தான் செல்ல வேண்டும் என கூறுவார்கள். அங்கு சட்டையுடன் தான் செல்வேன் என கூறமுடியுமா?. எனவே கோவில்களுக்கு என்று வகுக்கப்பட்ட நம்பிக்கையை நாம் கடைபிடித்து தான் ஆக வேண்டும். ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிற போது, அதில் குறைகள் இருந்தாலும் சரி... இல்லாவிட்டாலும் சரி... அதனை மத்திய அரசுக்கு எடுத்து சொல்பவராக தான் கவர்னர் இருக்க வேண்டும். இதை விடுத்து கவர்னர் ஆய்வுக்கு செல்லக்கூடாது. அப்படியெனில் பிரதமர் மோடி செல்ல வேண்டிய இடத்திற்கு, ஜனாதிபதி ஆய்வுக்கு செல்லமுடியுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

சிங்கப்பூரில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறார்கள். எனவே வரும் காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை பாதுகாப்பது, மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து “ஆஸ்க் சரத்குமார்” என்கிற செயலி மூலம் நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருக்கிறோம். மீண்டும் மோடி பிரதமர் ஆவாரா? இல்லையா? என ஜோசியம் சொல்ல முடியாது. ஆனால் ஆகமாட்டார் என்பது எனது ஆழமான கருத்து. கூட்டணி குறித்து பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருகிற போது எனது நிலைபாட்டை அறிவிப்பேன். ஸ்டெர்லைட் விவகாரத்தில் சிக்கிய வேதாந்தா நிறுவனத்திற்கு மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story