தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரேஷன்கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரேஷன்கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 15 Oct 2018 11:00 PM GMT (Updated: 15 Oct 2018 9:18 PM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரேஷன்கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

தர்மபுரி,

தமிழகம் முழுவதும் ரேஷன்கடை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை ரேஷன்கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். நுகர்பொருட்கள் வினியோகத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும்.

ரேஷன்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரேஷன்கடைகளில் சரியான எடையில் நுகர்வோருக்கு பொருட்கள் வழங்குவதோடு 100 சதவீத பொருட்கள் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும். உணவு பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கிய அம்சங்களாக வலியுறுத்தப்படுகின்றன.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் பணியை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன்கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. நகர்ப்புற பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை பண்டகசாலை ரேஷன்கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. பல இடங்களில் ரேஷன்கடைகள் மூடப்பட்டிருந்ததால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுவினியோகதிட்ட பொருட்களை வினியோகிக்கும் பணி நேற்று பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி சுகமதி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ரேஷன் கடை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1050 ரேஷன் கடைகளில் 850 கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் மாவட்ட தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சோமேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன் பேசினார். நிர்வாகிகள் முகமத்கான், வேலு, பழனிசாமி, நாகேஷ், பிரபாகரரெட்டி, செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story