காவல்துறை சார்பில் பெண்கள்–முதியோர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவும் புதிய செயலி அறிமுகம்


காவல்துறை சார்பில் பெண்கள்–முதியோர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவும் புதிய செயலி அறிமுகம்
x
தினத்தந்தி 16 Oct 2018 10:45 PM GMT (Updated: 16 Oct 2018 2:52 PM GMT)

காவல்துறை சார்பில் பெண்கள்–முதியோர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவும் புதிய செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

நாகர்கோவில்,

தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு அவசர உதவிக்காக புதிய செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் நேற்று நாகர்கோவில் இந்து கல்லூரியில் இந்த புதிய செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, புதிய செயலியை அறிமுகப்படுத்தி மாணவிகளிடம் செயலியை குறித்து விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக காவல்துறை சார்பில் காவலன் எஸ்.ஓ.எஸ் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பெண்கள் மற்றும் முதியோர்கள் தங்கள் ஆபத்து காலத்தில் பயன்படுத்த எளிதாக இருக்கும்.


இந்த புதிய செயலியை தங்கள் செல்போனில் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் அதில் கேட்கும் அனுமதிகளை கொடுத்து உங்கள் செல்போன் எண், பெயர், மற்றொரு எண், பிறந்த தேதி, பாலினம், முகவரி போன்றவற்றை கொடுக்க வேண்டும். பின்னர், தாங்கள் ஆபத்து நேரத்தில் இருக்கும் போது யாருக்கு உங்கள் போனில் தகவல் செல்ல வேண்டமோ அவர்களின் பெயர், செல்போன் எண், உறவினர் முறை ஆகியவற்றை நீங்கள் பதிவு செய்து வைக்க வேண்டும்.

உங்களுக்கு ஆபத்து ஏற்படும்போது உங்கள் செல்போனில் நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ள எஸ்.ஓ.எஸ். செலியை தொட்டால் போது அது காவல் தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தங்களின் விவரம், இருப்பிடம் மற்றும் உங்களை சுற்றி உள்ள 15 நிமிட வீடியோ பதிவாகி சென்று விடும். நீங்கள் பதிவு செய்து வைத்த உறவினர் எண்ணுக்கும் இந்த விபரம் செல்லும். காவல் தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு இந்த விபரம் சென்ற உடனே தங்களின் செல்போனுக்கு அழைப்பு வந்து உங்களது நிலைமை பற்றி கேட்கப்படும். அதைதொடர்ந்து தங்களின் இருப்பிடம் அருகே ரோந்து பணியில் இருக்கும் காவலருக்கு தெரிவிக்கப்பட்டு உங்களுக்கு விரைவாக உதவி செய்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு, பேராசிரியை மங்கையர்கரசி மற்றும் மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story