தூத்துக்குடி விமான நிலையத்தில் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி


தூத்துக்குடி விமான நிலையத்தில் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 17 Oct 2018 10:00 PM GMT (Updated: 17 Oct 2018 1:42 PM GMT)

தூத்துக்குடி விமான நிலையத்தில் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி விமான நிலையத்தில் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

ஆயுர்வேத தினம்

தேசிய ஆயுர்வேத தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்திய விமான நிலைய ஆணையம் குழுமம் சார்பில் உலக சாதனை படைக்கும் வகையில் தென்னிந்தியாவில் உள்ள 21 விமான நிலையங்களில் காலை 10 மணி முதல் 10.05 மணிக்குள் 21 ஆயிரம் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்படி தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் கண்ணன், ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் 298 பேர் கலந்து கொண்டு 4 ஆயிரத்து 550 மூலிகை செடிகளை நட்டனர். இதில் பொன்னாங்கன்னி, நித்தியகல்யானி, வெற்றிலை, கற்றாழை, வல்லாரை, துளசி, ஓமம், சித்தரத்தை, பெரியாநங்கை உள்ளிட்ட 15 வகையான மூலிகை செடிகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் விமான நிலைய அலுவலர்கள், விமான நிறுவன அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உலக சாதனை

இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறும் போது, தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி மூலிகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தென்னிந்தியாவில் உள்ள 21 விமான நிலையங்களிலும் ஒரே நேரத்தில் 5 நிமிடத்தில் 21 ஆயிரம் மூலிகை செடிகளை நட்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்படி 5 நிமிடத்தில் 4 ஆயிரத்து 550 செடிகள் நடப்பட்டு உள்ளன. இந்த ஆணவங்கள் அனைத்தும் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யும் அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று கூறினார்.


Next Story