ஆயுத பூஜைை-யை முன்னிட்டு வாழைத்தார், பூக்கள் விலை கடும் உயர்வு


ஆயுத பூஜைை-யை முன்னிட்டு வாழைத்தார், பூக்கள் விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 17 Oct 2018 10:45 PM GMT (Updated: 17 Oct 2018 8:46 PM GMT)

ஆயுத பூஜையை முன்னிட்ட வாழைத்தார், பூக்கள் விலை இரு மடங்கு முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது.

நொய்யல்,

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, என்.புகழுர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும், வியாபாரிகளுக்கும் விற்பனை செய்கின்றனர். சில வியாபாரிகள் வாழைத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றனர்.

வாழைத்தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை நாமக்கல், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரத்தில் பூவன் வாழைத்தார் ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.500-க்கும் வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். ஆயுத பூஜையையொட்டி நேற்று பூவன் வழைத்தார் ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ400-க்கும், மொந்தன் வாழைத்தார். ரூ.700-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்். ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தார் களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் நடையனூர், முத்தனூர், கவுண்டன்பதூர், சேமங்கி, மரவாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி, முல்லைப்பூ, செண்டுமல்லி, அரளி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா போன்ற பூக்களையும், மருவு, துளசி, கோழிக்கொண்டைப்பூ போன்ற தழை வகைகளையும் பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் உள்ள பூக்களை வாங்குவதற்கு வேலாயுதம்பாளையம், கொடுமுடி, பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பரமத்தி தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு நேரடியாக வந்து கொள் முதல் செய்து விட்டு செல்கின்றனர்.

ஆயுதபூஜையையொட்டி நேற்று பூக்கள் விலை உயர்ந்தது. குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ.900-க்கும், முல்லைப்பூ ரூ.1000-க்கும், அரளி ரூ.450-க்கும், சம்மங்கி ரூ.500-க்கும், மஞ்சள் சாமந்திப்பூ ரூ.400-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.200, கோழிக்கொண்டை ரூ.10-க்கும், ரோஜா ஒருகிலோ ரூ.300-க்கும்் துளசி ஒரு கட்டு ரூ.10-க்கும் வாங்கி சென்றனர். பூக்கள் விலை கடந்த வாரத்தை விட நேற்று 2 மடங்கு முதல் 3 மடங்குவரை விலை உயர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் இப்பகுதி பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story