ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை


ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை
x
தினத்தந்தி 17 Oct 2018 10:45 PM GMT (Updated: 17 Oct 2018 10:07 PM GMT)

ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, நெல்லை, கொடைக்கானல் போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வாங்கி செல்ல உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும், கேரளாவை சேர்ந்தவர்களும் அதிகாலையிலேயே தோவாளையில் குவிவார்கள். இங்கிருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக சாதாரண நாட்களில் விலை குறைவாகவும், பண்டிகை நாட்களில் விலை உயர்ந்தும் காணப்படும்.

தோவாளை மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைவாக காணப்பட்டது. ஆயுதபூஜை விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் நேற்று தோவாளை பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. பூக்களை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்தனர். அவர்கள் போட்டிப்போட்டு கொண்டு பூக்களை வாங்கினர். இதனால், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.400-க்கு விற்பனையான மல்லிகை ரூ.800 உயர்ந்து நேற்று ரூ.1,200-க்கு விற்பனையானது. இதுபோல் பிச்சி, முல்லை ஆகிய பூக்கள் ரூ.600-ல் இருந்து ரூ.1000 -மாக உயர்ந்தது.

தோவாளை பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளிப்பூ ரூ.250, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.130, சிவப்பு கேந்தி ரூ.100, சம்பங்கி ரூ.350, ரோஜா (100 எண்ணம்) ரூ.30, பட்டன்ரோஸ் ரூ.150, துளசி ரூ.50, தாமரை (100 எண்ணம்) ரூ.1000, பச்சை ரூ.10, கோழிப்பூ ரூ.50, கொழுந்து ரூ.120, மருக்கொழுந்து ரூ.150, மஞ்சள்கேந்தி ரூ.130, சிவந்தி மஞ்சள் ரூ.150, வெள்ளை சிவந்தி ரூ.200, ஸ்டெம்பு ரோஸ் (1கட்டு) ரூ.150 என விற்பனையானது.

Next Story