பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் தலைமறைவு: 3–வது நாளாக இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்


பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் தலைமறைவு: 3–வது நாளாக இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
x
தினத்தந்தி 21 Oct 2018 10:15 PM GMT (Updated: 21 Oct 2018 3:13 PM GMT)

புதுக்கடை அருகே இளம்பெண் தற்கொலைக்கு காரணமான வாலிபர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்யும் வரை இளம்பெண்ணின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறிய உறவினர்கள் நேற்று 3–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கடை,

புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உண்டு. ராஜேசுக்கு, 22 வயதில் ஒரு உறவுக்கார இளம்பெண் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 19–ந் தேதி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து இளம்பெண்ணின் சாவுக்கு காரணமான ராஜேசை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இளம்பெண்ணின் உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ராஜேசை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் ராஜேசை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது உறவினர் ஒருவரின் வீட்டில் ராஜேஷ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர் அங்கு இல்லை. போலீசார் கண்டுபிடித்ததை முன்கூட்டியே அறிந்த ராஜேஷ் வேறு எங்கோ தப்பிச் சென்றுவிட்டார். இதே போல மற்றொரு உறவினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்போது ராஜேஷ் திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளன. எனவே போலீசார் திருவனந்தபுரம் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

ராஜேசை கைது செய்யும் வரை இளம்பெண்ணின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து இருப்பதால் அவரது உடல் நேற்றும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது. உடலை வாங்க மறுத்து 3–வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story