தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்; அடுத்த மாதம் நடக்கிறது


தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்; அடுத்த மாதம் நடக்கிறது
x
தினத்தந்தி 21 Oct 2018 11:30 PM GMT (Updated: 21 Oct 2018 6:42 PM GMT)

நடிகை தீபிகா படுகோனே - நடிகர் ரன்வீர் சிங் திருமணம் அடுத்த மாதம் நடக்க உள்ளது.

மும்பை,

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமே‌ஷன் படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கும் இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்தது. 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் பாஜிராவ் மஸ்தானி, பைண்டிங் பன்னி, பத்மாவத் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பத்மாவத் படத்தில் ரன்வீர்சிங் வில்லனாக வந்தார். ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் ஜோடியாக சுற்றும் படங்கள் அடிக்கடி வெளிவந்தன. இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடப்பதாகவும் கூறப்பட்டது.

ரன்வீர்சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா தூதுவராக இருக்கிறார். எனவே அங்குள்ள அரசாங்கம் அந்த நாட்டுக்கு வந்து திருமணம் செய்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால் தீபிகா படுகோனே இத்தாலியில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.

நடிகை அனு‌ஷ்கா சர்மாவுக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இத்தாலியில்தான் திருமணம் நடந்தது. இத்தாலி அரசும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்து இருந்தது. இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர்.

இந்தநிலையில் தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் திருமணம் அடுத்த மாதம் (நவம்பர்) 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தீபிகா படுகோனேவும்-ரன்வீர் சிங்கும் திருமண அழைப்பிதழை நேற்று டுவிட்டரில் அறிவித்தனர்.

Next Story