தமிழகத்தில் 1,500 சிலைகள் மீட்பு: ரூ.400 கோடி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தடுத்து நிறுத்தம்


தமிழகத்தில் 1,500 சிலைகள் மீட்பு: ரூ.400 கோடி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Oct 2018 11:15 PM GMT (Updated: 21 Oct 2018 7:05 PM GMT)

தமிழகத்தில் இதுவரை 1,500 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ரூ.400 கோடி மதிப்புள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் திருவாரூரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் நேற்று சிலைகளின் தொன்மை தன்மையை ஆய்வு செய்யும் பணியை தொடங்கினர். இந்த ஆய்வு பணி மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிலை ஆய்வு பணிகளை பார்வையிடுவதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று இரவு திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு வந்தார். அப்போது ஆய்வு பணிகள் தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம், ஐ.ஜி. கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை 395 சிலைகளை ஆய்வு செய்து விட்டோம். திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் சுமார் 3,500 சிலைகளின் தொன்மை தன்மையை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளோம். இன்று (நேற்று) 87 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வு நாளை (இன்று) காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கும். அனைத்து சிலைகளும் ஆய்வு செய்யப்படும். ஆய்வின் முடிவில் தான் முழு விவரங்களையும் தெரிவிக்க முடியும்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ரன்வீர்ஷா திருப்பணிகள் மேற்கொண்டபோது பணிகளை பாதியிலேயே விட்டு சென்று விட்டதாகவும், அப்போது அவர் ஒரு சில தூண்களை கடத்தி சென்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அவரிடம், முழுமையாக விசாரிக்க வேண்டி உள்ளது. அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதனை நிராகரிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேலூரில் தொழில் அதிபர் ரன்வீர்ஷாவால் எடுக்கப்பட்ட சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக வழக்கு போடப்பட்டுள்ளது. அந்த வழக்கு எங்களுடைய பிரிவுக்கு விரைவில் வந்து சேரும்.

100 வயதுக்கு கீழே இருந்தால் அது பழமையான சிலை எனவும், 100 வயதுக்கு மேலே இருந்தால் தொன்மையான சிலை எனவும் கருதப்படும். இதை அறிவதற்காக தான் தொல்லியல் துறை கோவில்களில் உள்ள சிலைகளை ஆய்வு செய்து வருகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் எந்த சிலை காணாமல் போனது? என்பது குறித்து புகார் அளித்து வழக்குப்பதிவு செய்தால் தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும். யூகத்தின் அடிப்படையில் எதனையும் முடிவு செய்ய இயலாது. தமிழகத்தில் இதுவரை 1,500 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. இதுமட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ரூ.150 கோடி மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் ரூ.400 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story