தி.மு.க.வுடன் டி.டி.வி. தினகரன் கூட்டு சேர்ந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது அமைச்சர் பேச்சு


தி.மு.க.வுடன் டி.டி.வி. தினகரன் கூட்டு சேர்ந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 21 Oct 2018 10:45 PM GMT (Updated: 21 Oct 2018 7:19 PM GMT)

தி.மு.க.வுடன் டி.டி.வி. தினகரன் கூட்டு சேர்ந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என மன்னார்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார் வரவேற்றார். முன்னாள் நகரசபை தலைவர் சுதாஅன்புச்செல்வன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரிமுத்து, நகர இளைஞர் அணி செயலாளர் கோபி, முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் கோவிந்தரராஜ், நகரசபை முன்னாள் துணைத்தலைவர் வரலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.விற்கு இணையாக இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் இல்லை. அ.தி. மு.க.வை அழிக்கும் எண்ணம் ஒரு நாளும் பழிக்காது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என ஒரே எண்ணம், ஒரே கனவுடன் இருந்து வருகிறார். ஏழைகளுக்கு நல்ல திட்டங்களை வழங்கிய கட்சி அ.தி.மு.க.தான்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களிலும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை வெல்ல முடியாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. போடப்பட்டுள்ள ஊழல் வழக்கு பொய்யானது. அந்த வழக்கில் முதல்-அமைச்சர் வெற்றி பெறுவார். தி.மு.க.வுடன், டி.டி.வி.தினகரன் கூட்டு சேர்ந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராமன், கூட்டுறவு பால் வழங்கும் சங்க தலைவர் கலியபெருமாள். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமதுஅஷ்ரப், மாவட்ட அண்ணா தொழிலாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 12-வது வார்டு செயலாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.

Next Story